சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் |
ஏழாம் திருமுறை |
7.88 திருவீழிமிழலை பண் - சீகாமரம் |
நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்
நான்மறைக்கிட மாயவேள்வியுள்
செம்பொ னேர்மடவாரணி
பெற்ற திருமிழலை
உம்பரார்தொழு தேத்தமாமலை
யாளொடும்முட னேஉறைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
|
1 |
விடங்கொள்மாமிடற் றீர்வெள்ளைச்சுருளொன்
றிட்டுவிட்ட காதினீரென்று
திடங்கொள் சிந்தையினார்
கலிகாக்குந் திருமிழலை
மடங்கல்பூண்டவி மானம்மண்மிசை
வந்திழிச்சிய வானநாட்டையும்
அடங்கல் வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
|
2 |
ஊனைஉற்றுயிர் ஆயினீரொளி
மூன்றுமாய்த்தெளி நீரோடானஞ்சின்
தேனை ஆட்டுகந்தீர்
செழுமாடத் திருமிழலை
மானைமேவிய கையினீர்மழு
வேந்தினீர்மங்கை பாகத்தீர்விண்ணில்
ஆன வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
|
3 |
பந்தம்வீடிவை பண்ணினீர்படி
றீர்மதிப்பிதிர்க் கண்ணியீரென்று
சிந்தை செய்திருக்குஞ்
செங்கையாளர் திருமிழலை
வந்துநாடகம் வானநாடியர்
ஆடமாலயன் ஏத்தநாடொறும்
அந்தண் வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
|
4 |
புரிசைமூன்றையும் பொன்றக்குன்றவில்
லேந்திவேதப் புரவித்தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர்
சிறந்தேத்துந் திருமிழலைப்
பரிசினாலடி போற்றும்பத்தர்கள்
பாடியாடப் பரிந்துநல்கினீர்
அரிய வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
|
5 |
எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன்
ஏத்துபத்தர்கட் கேற்றம்நல்கினீர்
செறிந்த பூம்பொழில்
தேன்துளிவீசுந் திருமிழலை
நிறைந்தஅந்தணர் நித்தநாடொறும்
நேசத்தாலுமைப் பூசிக்கும்மிடம்
அறிந்து வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
|
6 |
பணிந்தபார்த்தன் பகீரதன்பல
பத்தர்சித்தர்க்குப் பண்டுநல்கினீர்
திணிந்த மாடந்தொறுஞ்
செல்வம்மல்கு திருமிழலை
தணிந்தஅந்தணர் சந்திநாடொறும்
அந்திவானிடு பூச்சிறப்பவை
அணிந்து வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
|
7 |
பரந்தபாரிடம் ஊரிடைப்பலி
பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர்
தெரிந்த நான்மறை
யோர்க்கிடமாய திருமிழலை
இருந்துநீர்தமி ழோடிசைகேட்கும்
இச்சையாற்காசு நித்தல்நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
|
8 |
தூயநீரமு தாயவாறது
சொல்லுகென்றுமைக் கேட்கச்சொல்லினீர்
தீயராக் குலையாளர்
செழுமாடத் திருமிழலை
மேயநீர்பலி ஏற்றதென்னென்று
விண்ணப்பஞ்செய் பவர்க்குமெய்ப்பொருள்
ஆய வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுதிரே.
|
9 |
வேதவேதியர் வேதநீதியர்
ஓதுவார்விரி நீர்மிழலையுள்
ஆதி வீழிகொண்டீர்
அடியேற்கும் அருளுகென்று
நாதகீதம்வண் டோதுவார்பொழில்
நாவலூரன்வன் றொண்டன்நற்றமிழ்
பாதம் ஓதவல்லார்
பரனோடு கூடுவரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |